தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கை இணைக்கும் மணலாற்றில் சிங்களக் குடியேற்றங்களை வலுப்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இதனை முன்னிட்டு முல்லைத்தீவு – திருகோணமலையை இணைக்கும் மணலாற்றுக்கு நேற்று முன்தினம் நேரில் சென்ற சிறீலங்கா அதிபரது மூத்த ஆலோசகரும், சகோதரருமான பசில் ராஜபக்ச, அதற்கான திட்டங்களை வகுத்துள்ளார்.
வடக்கு – கிழக்பைப் பிரிக்கும் நோக்குடன் மணலாற்றில் ஏற்கனவே குறிப்பிட்டளவு சிங்களவர்கள் குடியேற்றப்பட்டிருந்த போதிலும், போர் காரணமாக இவர்கள் இடம்பெயர்ந்திருந்தனர்.
இவ்வாறு இடம்பெயர்ந்த சிங்கள மக்களை உடனடியாக மீளக் குடியேற்றுவதுடன், மேலும் பல புதிய குடியேற்றங்கள் அங்கு மேற்கொள்ளப்படவுள்ளன.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31ஆம் நாளுக்கு முன்னர் மணலாற்றில் இருந்து இடம்பெயர்ந்த சிங்கள மக்கள் மீளக் குடியேற்றப்பட இருப்பதாகவும், இதற்கென 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு, வீதிப் புனரமைப்புப் பணிகள் இடம்பெற இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வன்னியில் தமது சொந்த நிலங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை உடடியாக மீளக் குடியேற்ற மறுத்துவரும் சிறீலங்கா அரசு, மணலாற்றில் சிங்கள மக்களை அவசரமாகக் குடியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றது.
மணலாற்றிலுள்ள கண்ணிவெடிகள், மற்றும் மிதிவெடிகளை அகற்ற அங்கு நிலைகொண்டுள்ள சிறீலங்கா படையினர் துரித நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பசில் ராஜபக்ச கூறியிருக்கின்றார்.
கல்யாணிபுரம், மொறவேவ, கஜபாபுர, ஜானகபுர, போன்ற பிரதேசங்களில் மின்சாரம், குடிநீர் போன்ற அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளுமாறு, பதவியா பிரதேச சபைக்கும் பசில் ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
1980 களில் மணலாற்றை ஆக்கிரமித்து, சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்ட சிறீலங்கா அரசு, மணலாறு என்பதை அப்படியே சிஙகளத்தில் மொழிபெயர்த்து “வெலிஓய” என பெயர் சூட்டியதுடன், அங்கிருந்த தமிழ்க் கிராமங்களுக்கும் சிங்களப் பெயர்களையே இட்டுள்ளது.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா தலைமையில், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் இடம்பெற்ற ஆக்கிமிப்பின்போது, ஜானக பெரேராவின் ஞாபகார்த்தமாக ஜானகபுர என்ற பெயரும் தமிழ்க் கிராமத்திற்குச் சூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

